×

கோடை துவங்கும் முன்பே களக்காடு பச்சையாறு அணை வறண்டது : விவசாயிகள் கவலை

களக்காடு:  கோடை துவங்கும் முன்பே களக்காடு பச்சையாறு அணை வறண்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் களக்காடு அருகே மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். இந்த அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதியில் உள்ள 110 குளங்கள் பயன் பெற்று வருகின்றன. இதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.

பச்சையாறு அணை கடந்த 2001ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. அப்போது அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டியது. அதன்பின் கடந்த 2009, 2014ம் ஆண்டு மழையின் போது அணை நிரம்பி ததும்பியது. அதன் பின்னர் அணை நிரம்பவில்லை. அணை முழு கொள்ளளவை
எட்டுவதற்கு முன்பே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு தேங்காய் உருளி அருவி அருகே உள்ள ஊட்டு கால்வாய் மூலமே தண்ணீர் திறக்கப்படுகிறது. அதுதவிர கீரைக்காரன் தொண்டு மலையில் பெய்யும் தண்ணீரும் அணைக்கு வந்து சேர்கிறது.

கடந்த 2018ம் ஆண்டு அணை 30 அடியை எட்டிய போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பின் களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை இப்பகுதியில் போதிய அளவு பெய்யவில்லை. இதையடுத்து கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே களக்காடு பச்சையாறு அணை தண்ணீர் இன்றி வறண்டு காட்சி அளிக்கிறது. அணையின் உள்பகுதியில் ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கி உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்தும் இல்லை. இந்த அணை விவசாயத்திற்கு மட்டுமின்றி அப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. கோடை காலம் துவங்கும் முன்பே அணை வறண்டதால் விவசாய தேவைக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kalakkadu Pachaiyarai , Kalakkad, Pachaiyar Dam, Farmers
× RELATED பிசான சாகுபடிக்காக களக்காடு...