* புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தது
நாகர்கோவில்: கடலோர பகுதிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள இருந்த கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்வு செய்யப்பட்டு கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது. கடலோர பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. சிஆர்இசட் -2, சிஆர்இசட்-3 பிரிவுகளின் கீழ் வருகின்ற இடங்களில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுவது இல்லை. இந்தநிலையில் வீடு கட்டுதல், சுற்றுலா சார்ந்த திட்டங்களுக்கு விதிமுறைகளை தளர்த்தி புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 2011 முதல் தொடருகின்ற கட்டுப்பாடுகளில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக கடலோர பகுதிகளில் மக்கள் நெருக்கத்தின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. இனி சுற்றுலா சார்ந்த திட்டங்கள், கடற்கரை தங்கும் விடுதிகள் கட்டுமானங்களுக்கு அதிக அளவில் அனுமதி வழங்கப்படும். சிஆர்இசட்-1ன் கீழ் வருகின்ற இடங்களில் சுரப்புன்னை காடுகள் நிறைந்த பகுதிகளில் சூழியல் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்த வசதியாக பூங்காக்கள், மர வீடுகள் போன்றவை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் புதிய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
* ஆயிரம் சதுர மீட்டர் அளவில் பரந்து விரிந்து காணப்படுகின்ற கண்டல் காடுகள் சிஆர்இசட் 3 பிரிவின் கீழ் வருகிறது. இந்த கண்டல் காடு பகுதிகளில் 50 மீட்டர் மட்டுமே இனி பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். சூழியல் சுற்றுலா, பைப் லைன், கேபிள் லைன் போன்றவற்றுக்கு இந்த பிரிவில் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
* கடல்நீர் உட்புகும் பகுதிகளில் 500 மீட்டர் அகலம் உள்ள இடங்கள் மிகுந்த கட்டுப்பாடு நிறைந்த பகுதியாக தொடர்ந்து அமலில் இருக்கும். நகர பகுதிகள் முழுவதும் சிஆர்இசட்-2ன் கீழ் புதிய அறிவிக்கை அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 1994க்கு முன்பு சாலைகள், அங்கீகரிக்கப்பட்ட கட்டிடங்கள் உள்ள இடங்கள் வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். 9 மீட்டருக்கு கூடுதலாக உயரம் உள்ள கட்டிடங்கள் இப்பகுதிகளில் அனுமதிக்கப்பட மாட்டாது.
* ஊராட்சி பகுதிகளில் மக்கள்தொகை அடிப்படையில் 3 ஏ, 3 பி என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் சதுர கிலோ மீட்டருக்கு 2016ல் கூடுதலாக மக்கள்தொகை உள்ள பகுதிகள் ‘3-ஏ’க்கு கீழ் வருகிறது. குறைவாக உள்ள பகுதிகள் ‘3-பி’ க்கு கீழ் வருகிறது. இந்த பகுதிகளில் பல்வேறு விதிமுறைகள் பெருமளவு தளர்வு செய்யப்பட்டுள்ளது.
* பெ‘3 ஏ’ பகுதியில் கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு கட்டுமானங்கள் கூடாது என்பது 50 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. 300 சதுர மீட்டர் வரையுள்ள வீடுகள் கட்ட கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி தேவையில்லை. காயல்கள், தீவு பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கான கட்டுப்பாடு 20 மீட்டர் அகலமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது 50 மீட்டராக இருந்தது.
* பெருமளவு கட்டுப்பாடுகளை தளர்த்தி சிஆர்இசட் சட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும் இதனை செயல்படுத்த புதிய அறிவிக்கை அடிப்படையில் கடலோர ஒழுங்குமுறை வரைபடம் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதற்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும். 2011ல் கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கை சார்ந்த வரைபடம் இதுவரை அங்கீகரிக்கப்பட வில்லை. கடலோர பகுதிகளில் மக்கள் நெருக்கத்தின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. இனி சுற்றுலா சார்ந்த திட்டங்கள், கடற்கரை தங்கும் விடுதிகள் கட்டுமானங்களுக்கு அதிக அளவில் அனுமதி வழங்கப்படும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி