* மக்கள் மகிழ்ச்சி
நத்தம் : தினகரன் செய்தி எதிரொலியாக நத்தம் கோவில்பட்டி மயான பாதையில் கொட்டப்பட்டிருந்த இறைச்சி கழிவுகள் உடனடியாக அகற்றப்பட்டன. நத்தம் பேரூராட்சிக்குட்பட்ட 9, 14 வார்டுகளில் நகர், கோவில்பட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் மயான பாதை உள்ளது. இதில் கோவில்பட்டி மக்கள் திருமணிமுத்தாறு பாலத்தின் அருகே மயானத்திற்கும் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் இறைச்சி கழிவுகள், எச்சில் இலைகள் போன்றவற்றை கொட்டி வந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியே கடும் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த ஜன.31ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அன்றே பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் உள்ள கழிவுகளை பணியாளர்கள் மூலம் அகற்றி பிளிச்சிங் பவுடர் போட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாத அளவிற்கு சீமைக்கருவேல முள்ளை வெட்டி போட்டு வேலி அமைத்து விட்டனர். இதை கண்டு அப்பகுதி மக்கள் தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர். இதேபோல் பேரூராட்சி நிர்வாகம் திருமணிமுத்தாறு பாலத்தின் கீழ் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி