சென்னை: தொடர் தோல்வியில் துவண்டு கிடக்கும் சென்னையின் எப்சி அணி, இன்று புனே எப்சி அணியுடன் மோதுகிறது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, இதுவரை விளையாடி உள்ள 13 லீக் ஆட்டங்களில் 1 வெற்றி, 2 டிரா, 10 தோல்வியுடன் 5 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இனி விளையாடும் போட்டிகளில் சென்னை அணி வென்றால் அது ஆறுதல் வெற்றியாக மட்டுமே இருக்கும். இந்த சீசனில் கொல்கத்தா, மும்பை, வடகிழக்கு ஒன்றிய அணிகளிடம் தலா 2 முறையும், பெங்களூர், கோவா, ஜாம்ஷெட்பூர், டெல்லி அணிகளிடம் தலா ஒரு முறையும் தோல்வி அடைந்துள்ளது.
சென்னை அணி வீழ்த்திய ஒரே அணி புனே மட்டும்தான். அதே அணியுடன் சென்னையில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னையின் எப்சி மீண்டும் மோத உள்ளது. ஆசிய கோப்பை தொடர் காரணமாக ஏற்பட்ட இடைவெளிக்குப் பிறகு நடந்த போட்டியில் புதிய வீரர்களுடன் களமிறங்கியும் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணியிடம் தோல்வி அடைந்தது. அதனால் இன்று புனே அணியுடன் மோதும் போட்டியில் கேரளாவிடம் கடன் வாங்கிய வீரர்களுக்கு பதிலாக மீண்டும் ஜேஜே, இனிகோ போன்றவர்கள் களமிறக்கப்படலாம். உள்ளூரில் நடக்கும் போட்டி சென்னைக்கு சாதகமாக இருக்குமா என்பது தெரியவில்லை. இந்த தொடரில் உள்ளூரில் விளையாடிய ஒரு போட்டியில் கூட சென்னையின் எப்சி வெற்றி பெறவில்லை.
அதுமட்டுமல்ல, உள்ளூர் ஆட்டக்காரர்கள் இல்லாததால் சென்னை அணி மீது தமிழக கால்பந்து ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது.
அதே நேரத்தில் சென்னையை விட புனே அணி இப்போது வலுவானதாக உள்ளது. அந்த அணி புள்ளிப்பட்டியலில் 11 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது (12 போட்டி, 3 வெற்றி, 7 தோல்வி, 2 டிரா). எஞ்சியுள்ள போட்டிகளில் வென்றால் புனே அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கலாம்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி