திருமலை: ஆந்திரா தலைநகர் அமராவதியில் ₹150 கோடியில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.ஆந்திர தலைநகர் அமராவதியில் கிருஷ்ணா நதிக்கரையோரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுவதற்காக தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக சிஆர்டிஏ மூலமாக 25 ஏக்கர் நிலம் தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டது. இதையடுத்து கோயில் கட்ட ₹150 கோடி தேவஸ்தானம் ஒதுக்கீடு செய்தது.இந்நிலையில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘வரும் 10ம் தேதி முதல் கோயில் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் கோயில் முழுவதும் கட்டப்பட உள்ளது. இதில் ஆனந்த நிலையம், ராஜ கோபுரம், கல்யாண உற்சவ மண்டபம், புஷ்கரணி, ஆஞ்சநேய சுவாமி கோயில் ஆகியவை கட்டப்பட உள்ளன. சென்னையில் ₹5.75 கோடியில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டு வருகிறது’’ என்றார்.இதற்கிடையே, இந்த பூமி பூஜைக்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை. தேவஸ்தான அதிகாரிகள் அரசு நிர்வாகத்தில் ஆட்சி புரிகின்றனர் என்றும் துணை முதல்வர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி