சென்னை: ஜெயலலிதா மரணம் ெதாடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் அப்போலோ டாக்டர்கள் 5 பேர் பிப். 6ல் ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பட்டுள்ளது. அப்போலோ டாக்டர்கள் சிலரிடம் ஆணையம் நடத்திய விசாரணையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளிலும், அவருக்கு அளிக்கப்பட்ட உணவு வழங்கியதிலும் குளறுபடி நடந்து இருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது. மேலும், ஜெயலலிதாவிற்கு இதய வால்வில் ஏற்பட்ட வளர்ச்சியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியிருந்தால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் சிலர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும், ஜெயலலிதா எந்த பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரோ அது, கடைசி வரை சரி செய்யப்படவில்லை என்பதும் டாக்டர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில், அந்த டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய சசிகலா தரப்பு ஆணையத்திடம் கேட்டு கொண்டது. தொடர்ந்து, 11 டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய பட்டியல் அளித்தது. அதன்பேரில் பிப்ரவரி 5ம் தேதி 5 டாக்டர், ஒரு டெக்னீசியனும், 6ம் தேதி அப்போலோ டாக்டர்கள் பாபு மனோகரன், சிவஞான சுந்தரம், ராமகிருஷ்ணன், டி.சுந்தர், கே.மதன்குமார் ஆகிய 5 பேர் ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பபட்டுள்ளது.
இதற்கிடையே அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவக்குழு அமைப்பது தொடர்பாக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. அந்த மனு விசாரணைக்கு வரும் பட்சத்தில் இந்த டாக்டர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜராவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், பிப்ரவரி 5ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஆணையம் சார்பில் விசாரணையும், சசிகலா தரப்பு சார்பில் குறுக்கு விசாரணையும் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி