புதுடெல்லி: தன்னை சந்தித்தற்காக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பிரதமர் மோடி கடும் நெருக்கடி கொடுப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை சந்தித்த பிறகு மனோகர் பாரிக்கருக்கு பிரதமரிடம் இருந்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு தனது விஸ்வாசத்தை நிரூபிக்க மனோகர் பாரிக்கர் தன்னை தாக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று ராகுல்காந்தி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது பாரிக்கர் கவனத்திற்கு வரவில்லை என அவரே தம்மிடம் கூறியதாக ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த மனோகர் பாரிக்கர் தன்னிடம் உடல்நலம் விசாரித்ததில் கூட மலிவான அரசியல் இருந்துள்ளது என்று ராகுல்காந்திக்கு கடிதம் எழுதினார். பாரிக்கருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள ராகுல்காந்தி இருவரது சந்திப்பின் போது பேசிய எதையும் நான் வெளியில் கூறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி