×

தாழக்குடியில் உருக்கமான சம்பவம் எஜமானியை காப்பாற்ற குரங்கிடம் போராடி உயிரை விட்ட நாய்

ஆரல்வாய்மொழி: தாழக்குடியில் எஜமானியை கடிக்க வந்த குரங்குடன் போராடிய நாய், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம்  தாழக்குடியில் ஒரு ஆண் குரங்கு சுற்றித்திரிகிறது. இப்பகுதியில் வருவோர் செல்வோரை கடிக்க பாய்வதும், வீட்டில் உள்ள உணவு  பதார்த்தங்களை பறித்து உண்பதுமாக அதன் தொல்லை அதிகரித்தது.  இந்நிலையில் நேற்று மாலை மணி என்பவரது வீட்டில் அவரது மனைவி பத்மா  இருந்தார். அப்போது அவரின் வீட்டு காம்பவுண்டு சுவரில் அமர்ந்து இருந்த ஆண் குரங்கு, திடீரென பத்மாவை கடிக்க முயன்றது. இதனை பார்த்து  பத்மாவின் வளர்ப்பு நாய், எஜமானியை காப்பாற்ற குரங்கிடம் சண்டை போட தொடங்கியது.

ஆனால், ஆத்திரம் அடைந்த குரங்கு, நாயின் மார்பு பகுதியில் பயங்கரமாக கடித்து குதறியது. பின்னர் வீட்டில் புகுந்து சமையல் அறையில் இருந்த  பாத்திரங்கள் மற்றும் பொருட்களை தூக்கி வீசியது. எனினும் நாயோ விடவில்லை, தொடர்ந்து குரங்கை எதிர்த்து போராடியது. சுமார் அரை மணி  ேநரம் இந்த போராட்டம் தொடர்ந்தது. குரங்கு-நாய் சண்டையை பார்த்து பத்மா அலறினார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.  அவர்கள் வீட்டினுள் சென்றதும் குரங்கு தப்பி ஓடியது. ஆனால் குரங்கு கடித்ததில் படுகாயமடைந்த நாய் சிறிது நேரத்தில் இறந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த தாழக்குடி கிராம நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார். வனத்துறை அதிகாரிகள் உடனே  குரங்கை பிடித்து காட்டுக்குள் விடவேண்டும் என அப்பகுதி மக்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lowlands , Talakkuti, mistress, dog
× RELATED தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு,...