மதுரை: கஜா நிவாரணம் யாருக்கு, எவ்வளவு வழங்கப்பட்டது என்பதற்கான விபர பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ‘‘கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, இழப்பீடு வழங்க வேண்டும்,’’ என்று ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டமனுக்கள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது பேரிடர் மீட்பு ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசு 1146.12 கோடி வழங்கியது. கால்நடை இழப்புக்கு 14.21 கோடியும், வீடு மற்றும் குடிசைகளுக்கு 338.46 ேகாடியும் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 5 ஆயிரம் வீதம் 319.78 கோடியும் வழங்கப்பட்டது.
விவசாய பயிர்களுக்கு 505.72 கோடியும், தோட்டக்கலை பயிர்களுக்கு 30.89 கோடியும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் நிதி செலுத்தப்பட்டது. தென்னைக்கு 1,100 வழங்கப்படும். 2 ஹெக்டேர் தென்னை விவசாயிக்கு 7.75 லட்சம் வரை கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், நிவாரண உதவிகள் முறையாக சென்றடையவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், யார், யாருக்கு எவ்வளவு நிவாரணம் என்ற விபர பட்டியலை தாசில்தார், விஏஓ அலுவலகம், பொதுமக்கள் கூடுமிடங்களில் பார்வைக்கு வைக்கவும், சேதமடைந்துள்ள படகுகளுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை பிப்.12க்கு தள்ளி வைத்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி