பெங்களூரு: மக்களவைக்கு நடக்கும் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் 20 மற்றும் மஜத 8 தொகுதிகளில் போட்டியிட இருகட்சிகள் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. கர்நாடகா சட்டபேரவைக்கு கடந்தாண்டு மே மாதம் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 80 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசும், 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற மஜதவும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கூட்டணி அமைத்தன. இதிலும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற மஜதவுக்கு முதல்வர் பதவியை காங்கிரஸ் தலைமை விட்டுக் கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கூட்டணி அரசு சில சில சலசலப்புகளுக்கு இடையில் 8 மாத கால ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் மக்களவைக்கு இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், தற்போதுள்ள கூட்டணியை மக்களவை தேர்தலிலும் தொடர இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தேவகவுடாவுடன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் ஹாசன், மண்டியா, மைசூரு, பெங்களூரு வடக்கு,
ஷிவமொக்கா, பீதர், விஜயபுரா மற்றும் ரெய்ச்சூர் ஆகிய 8 தொகுதிகளை மஜத போட்டியிடும் வகையில் உடன்பாடு செய்து கொண்டுள்ளதாகவும், மீதமுள்ள 20 தொகுதிகள் காங்கிரசுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரம் மூலம் தெரிய வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. இரு கட்சிகளும் எடுத்துள்ள தேர்தல் உடன்பாடு முடிவுகளை பெங்களூருவில் இன்று நடக்கும் மஜத தேசிய செயற்குழு கூட்டத்தில் தேவகவுடா அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி