ஓசூர்: ஓசூர் சானமாவு வனப்பகுதிக்குள் மீண்டும் 30 யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால், வனத்தையொட்டிய கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதிக்குள், கடந்த சில ஆண்டுகளாக கர்நாடக வனப்பகுதியில் இருந்தும், ஜவளகிரியில் இருந்தும் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. சில தினங்களுக்கு முன் நூற்றுக்கணக்கான யானைகள் சானமாவு வனத்துக்குள் புகுந்தன. அவற்றை வனத்துறையினர் விரட்டினர்.
இதனிடையே கோலார் வனப்பகுதியிலிருந்து ஓசூர் உங்கட்டி வனப்பகுதிக்கு வந்த யானைகள் நேற்று முன்தினம் இரவில் ஓசூர்கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து சானமாவு வனப்பகுதிக்குள் நுழைந்தன. தற்போது யானைகள் சானமாவு வனத்தில் தஞ்சம் அடைந்துள்ளதால், சானமாவு, பீர்ஜேப்பள்ளி, ஆழியாலம், போடூர், ராமாபுரம், நாயக்கனப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் ஆடு, மாடு மேய்க்க வனத்தையொட்டிய பகுதிக்குள் செல்லவேண்டாம், இரவு நேரங்களில் தனியாக விவசாய நிலங்களில் காவலுக்கு இருக்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஓசூர்ராயக்கோட்டை சாலையை யானைகள் அடிக்கடி கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி