சென்னை : பல்கலைக்கழக இணைப்பு கட்டணம் செலுத்தாத 227ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் கீழ் 700 ஆசிரியர் கல்வி கல்லூரிகள் இயங்கி வருகிறது. இக்கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்திற்கு இணைப்புக் கட்டணமாக 75 ஆயிரம் ரூபாயை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும். இந்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செலுத்தவில்லை என்றால் 50 ஆயிரம் ருபாய் அபராதத்துடன் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அதன்படி கடந்த அக்டோபர் 31ம் தேதியுடன் இக்கல்லூரிகள் தங்கள் இணைப்புக் கட்டணத்தை செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை 227 ஆசிரியர் கல்வி கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளுக்கான இணைப்புக் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இணைப்பு கட்டணம் செலுத்தாத 227 ஆசிரியர் கல்வி கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இணைப்புக் கட்டணம் செலுத்தாத கல்லூரிகள் வரும் பிப்ரவரி 4ம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது 4ம் தேதியோ தங்கள் கல்லூரிகளுக்கான இணைப்பு கட்டணத்தை அபராததுடன் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி