×

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் : உதகை நீதிமன்றம் பிறப்பித்த சம்மனுக்கு எதிராக சயான், மனோஜ் தாக்கல் செய்த மனு வாபஸ்

சென்னை : கோடநாடு வழக்கில் நாளை ஆஜராகும்படி உதகை நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை ரத்து செய்யக்கோரி சயான், மனோஜ் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றனர். வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

வழக்கின் பின்னணி

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயான், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.

இதில் சயானின் மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சயானை போலீஸார் கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் இருவரும் ஜாமினில் உள்ளனர். ஜாமினில் உள்ளவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். முதல்வர் மீது பழி போட்டதால் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய போலீசார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  சயன், மனோஜ் ஜாமினை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டது. மேலும் கோடநாடு கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் ஜனவரி 29ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டது.

ஆஜராகும் உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு

இந்நிலையில் உதகை நீதிமன்றத்தில் ஆஜராகும் உத்தரவை எதிர்த்து சயான், மனோஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உதகை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யுமாறு சயான், மனோஜ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மனு வாபஸ் பெறப்பட்டது

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், நீதிமன்றத்தில் ஆஜராவதாக கூறி ஜாமீன் பெற்றுவிட்டு நிபந்தனையை மீறுவது சரியா என கேள்வி எழுப்பினார். மேலும் சயான், மனோஜ் ஆகிய இருவரும் வழக்கை திசை திருப்புவதாக குற்றம் சாட்டினார். மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர்களை மேத்யூ சாமுவேல் பேட்டி எடுத்தது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கில் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் ஜாமீன் ரத்து செய்யப்பட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனவும் அறிவுறுத்தினார். மனுதாரர்கள் மனுவை வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,Kodanadu ,withdrawal ,Manoj ,Suman ,Cyan , Ooty court, withdraw, cyan, manoj, kodanad, robbery, guilty
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...