சென்னை: இது நடந்தால் நிரந்தரமாக பிரச்னை தீருமே என்று நினைக்கத் தோன்றும். அப்படி நீண்ட காலமாக பேசப்பட்ட திட்டம் தான் கோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்கும் திட்டம். 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாராகியுள்ள இந்த திட்டத்தால் 1,100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க முடியும். அப்படி தடுக்கப்படும் தண்ணீர் தான் தமிழகத்தின் கடைகோடி மாவட்டத்துக்கும் பலன் தரப்போகிறது என்றால் யாருக்கு தான் மகிழ்ச்சி இருக்காது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்றவுடன், உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி அளித்ததும் திட்டம் துவங்கி விடும் என்கிறார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. கோதாவரி - காவிரியை இணைப்பதன் மூலம், தென்மாநிலங்களில் கிருஷ்ணா, பெண்ணாறு ஆறுகளும் இவற்றோடு இணைகின்றன.
கோதாவரி - காவிரியை இணைக்கும் போது, தண்ணீர் கீழிருந்து சற்று மேலே பாய்ந்து அதன் பின் சீராக தமிழகத்துக்குள் பாயும். கால்வாய் அமைத்து தண்ணீரை தமிழகத்துக்கு ெகாண்டு வந்தால் பாதி வழியில் ஆவியாகி குறைந்து விடும். அதனால், ‘லிப்ட் இரிகேஷன்’ முறையில், நவீன தொழில்நுட்பத்தை கொண்டு ராட்சத இரும்பு குழாய்கள் மூலம் கோதாவரி தண்ணீரை காவிரியில் இணைக்க முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், தமிழக - கர்நாடக மாநிலங்கள் இடையே பிரச்னை நிரந்தரமாக தீர்க்கப்படும் என்றும் மத்திய அரசு நம்புகிறது. காலம் காலமாக போட்டுக் கொண்டிருக்கும் சண்டை இதன் மூலமாக முடிவுக்கு வருமா என்பது இந்த திட்டம் அடிக்கல் நாட்டுவதுடன் அல்ல...பணிகள் துவங்கிய பின்னர் தான் நம்பிக்கை துளிர் விடும் என்பதென்னவோ நிதர்சனம்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி