மும்பை: ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் ஒரு நபரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர். மகாராஷ்டிராவில் சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சி மற்றும் திருவிழாக்களை குறிவைத்து அங்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மற்றும் உணவில் கொடிய ரசாயனத்தை கலந்து உயிரிழப்பை ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தீவிரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாத தடுப்பு படையினர் கடந்த சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தி தானே மாவட்டம், மும்ப்ராவில் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், டேப்லெட் கம்ப்யூட்டர், கார்டு டிஸ்க், பென் டிரைவ்கள், ரூட்டர், மொபைல் போன்கள் மற்றும் டயரிகளை பறிமுதல் செய்தனர்.
தீவிரவாத தடுப்பு படையினர் ஏற்கனவே கடந்த ஜனவரி 21 மற்றும் 22ம் தேதி அவுரங்காபாத் மற்றும் தானேயில் நடத்திய சோதனைகளின்போது ஒரு மைனர் உட்பட 8 பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் நடத்திய விசாரணையின்போது தான் மும்ப்ராவை சேர்ந்த நபர் பற்றி ெதரிய வந்தது. கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக பாம்பே போலீஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி