×

நங்கநல்லூர் பகுதியில் சாலை நடுவில் மின்கம்பத்தால் போக்குவரத்துக்கு இடையூறு: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஆலந்தூர்: நங்கநல்லூர் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று 2 ஆண்டாகியும், சாலை நடுவில் உள்ள மின் கம்பத்தை இதுவரை அகற்றாததால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
நங்கநல்லூர் 12வது தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுதவிர கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், இந்த சாலையில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். நங்கநல்லூரில் இருந்து ஆலந்தூர்,  ஆதம்பாக்கம்  வழியாக சென்னை மற்றும் தாம்பரம் பகுதிகளுக்கு  வாகனங்களில்  செல்வோர் வாகன நெரிசலில் சிக்காமல் இருக்க   இந்த சாலையையும் பயன்படுத்தி வருகின்றனர்.

வாகன போக்குவரத்து மிகுதி காரணமாக இச்சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த 2 ஆண்டுக்கு முன் நடந்தது. அப்போது,  புதிதாக தார்சாலை மற்றும் குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டது. ஆனால், சாலை நடுவில் இருந்த மின் கம்கம்பங்களை
 அகற்றி, சாலையோரம் அமைக்கவில்லை. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும்  வாகன ஓட்டிகள்  நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்குகின்றனர். கனரக வாகனங்கள் வரும்போது, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த மின் கம்பங்களை அகற்றி, சாலையோரம் வைக்க வேண்டும் அல்லது பூமிக்கடியில் பதிக்க வேண்டும் என  நங்கநல்லூரில் உள்ள  மின் வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகார்  கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  எனவே, பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும் முன், சாலை நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்றி, சாலையோரம் அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,area ,Nanganallur , Nanganallur area Disruption of traffic in the middle of the road: motorists driving in crash
× RELATED திராவிடத்தை அழிக்கலாம் என்பது மக்களை...