சென்னை: “மோடி வருத்தப்படுகிறார், கோபப்படுகிறார் என்பதற்காகவே குடியரசு தினவிழாவில் கோட்டை அமீர் விருதை இபிஎஸ், ஓபிஎஸ் நிறுத்தியுள்ளனர்” என்று திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. பதவியேற்பு விழாவுக்கு ஓ.பி.சி.பிரிவு மாநில தலைவர் நவீன் தலைமை தாங்கினார். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து திருநாவுக்கரசர் அளித்த பேட்டி: முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இடம் ஒதுக்கீட்டை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. தேர்தலை மனதில் வைத்து கொண்டு வந்ததற்கு தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு என்பது நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு தான் பாஜவுக்கு தெரியுமா?.
முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் உள்நோக்கத்துடன் ஆதரிக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தின் போது தமிழக அரசு சார்பில் மதநல்லிணக்கத்திற்காக கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. மோடி வருத்தப்படுகிறார், கோபப்படுகிறார்? என்பதற்காக இந்தாண்டு இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கோட்டை அமீர் விருதை நிறுத்தியிருக்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.உரிமைக்காக போராடுபவர்களை சிறையில் அடைப்பது பரிகாரமாகாது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி