ஷில்லாங்: மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 15 தொழிலாளர்களில், 2வதாக ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. மேகாலயா மாநிலம், ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள லும்தாரி கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட சுரங்கத்துக்குள், கடந்த டிசம்பர் 13ம் தேதி அருகிலுள்ள லெய்ட்டின் ஆற்று நீர் புகுந்தது. 370 அடி ஆழமும் 20 அடி அகலமும் கொண்ட அந்த சுரங்கத்துக்குள் 70 அடி ஆழத்திற்கு நீர் நிறைந்தது. இதில் சிக்கிய 15 சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் படை மற்றும் காவல்துறை ஈடுபட்டது.கடற்படையினர் பயன்படுத்தும் சிறியரக தானியங்கி வாகனம் மூலம், 42 நாட்களுக்குப் பிறகு கடந்த 17ம் தேதி சுரங்கத்தில் சிக்கியவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அது, அசாம் மாநிலம் சிராங் மாவட்டத்தை சேர்ந்த அமீர் ஹுசேன் என்பது கண்டறியப்பட்டு, அந்த சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சூழலில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களில் மேலும் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. மாவட்ட துணை ஆட்சியர் எப்.எம். டோப்த் கூறிய போது, “தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படையினர் 280 அடி ஆழத்தில் மற்றொரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாலை 3 மணிக்கு தகவல் தெரிவித்தனர்” எனக் கூறினார். சுரங்கத்தில் சிக்கிய மற்றத் தொழிலாளர்களும் இறந்திருப்பார்ககள் என்பதால், மீட்பு பணி தொடர்கிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி