கோவை: காவல் நிலையத்துக்கு புகார் மனு கொடுக்க வருபவர்களிடம்,‘‘பணம் கஷ்டமா.., எங்கேயும் போய் கை கட்டி நிக்காதீங்க.., நான் தர்றேன்..., 16 பர்சன்ட் வட்டி..., ஏடிஎம் கார்டை என்கிட்ட கொடுத்துருங்க..., ’’ என பேசி ‘கந்து வட்டி பிசினசில்’ இறங்கினார் கோவை செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டய்யா ஒருவர். இவரின் பேச்சை நம்பி 2 லட்சம் ரூபாய் வாங்கிய பெண் தொழிலாளி ஒருவர், மாதந்தோறும் 16 ஆயிரம் ரூபாய் வட்டி கட்டி வருகிறார். தனது கூலி, தனது கணவரின் சம்பளத்தை வாங்கி, படாதபாடு பட்டு வட்டி கட்டி வருகிறார்.
இந்த விவரம் தெரிந்த ஏட்டய்யாவின் மனைவி, ‘‘எனக்கு தெரியாம எப்படி என் புருஷன்கிட்ட வட்டிக்கு பணம் வாங்கலாம், நீ என் புருஷனை வெச்சிருக்கியா’’ என சக்களத்தி பாணியில் செல்போனில் அர்ச்சனை செய்தார். இந்த ‘ஆடியோ’ ஆதாரத்தை அந்த பெண்மணி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்து, புகார் மனு அளித்தார். இதையடுத்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு ஏட்டய்யாவுக்கு பணம் எங்கிருந்து வந்தது? என விசாரிக்க உளவுப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி, விசாரணை நடந்து வருகிறது. இதே மாதிரி போலீஸ்காரங்க வேறு யாராவது கந்து வட்டி பிசினஸ் செய்றாங்களா? என்பது பற்றியும் உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்கிறாங்க... விரைவில் ஆப்பு வைக்கப்படும் என்கிறார்கள் உளவுப்பிரிவு அதிகாரிகள்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி