மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முனியாண்டி கோவில் திருவிழாவில் அண்டா அண்டாவாக பிரியாணி செய்து சுடச்சுட பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பாக இந்த திருவிழா நடைபெற்றது. அசைவ உணவுக்கு புகழ் பெற்ற முடியாண்டி விலாஸ் உணவு விடுதிகளை நடத்துபவர்கள் மதுரை வடக்கம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள். தமிழகம் எங்கும் உள்ள முனியாண்டி விலாஸ் உணவகங்களின் உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டி, வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாவை நடத்தி வருகின்றன.
84வது ஆண்டாக நடந்த இந்த திருவிழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, சிங்கப்பூர், துபாயில் முடியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள், குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். இந்த விழாவை முன்னிட்டு, கையில் காப்புக்கட்டி ஒரு வாரம் விரதம் இருந்த பக்தர்கள், பால் குடம் எடுத்து முடியாண்டி சாமிக்கு அபிஷேகம் செய்தனர். மலை போல குவித்து வைக்கப்பட்ட அரிசி மூட்டைகள், கோவிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்டிருந்த 200 ஆடுகள் மற்றும் 300க்கும் அதிகமான கோழிகளை கொண்டு தங்களுக்கே உரிய பக்குவத்தில் பிரியாணி சமைத்து சாமிக்கு படைத்தனர். பின்னர் பிரியாணி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பிரியாணி திருவிழாவில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி