கோவை: கோவை ரயில்நிலைய வளாக பிரதான நுழைவு வாயில் அருகே 2 டன் எடையில் அமைக்கப்பட்ட 100 அடி உயர இரும்பு கம்பத்தில் தேசிய கொடி இன்று ஏற்றப்பட்டது. கொடியை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் ஏற்றி வைத்தார். 30 அடி நீளம், 20 அடி அகலம், 9.5 கிலோ எடை கொண்ட பாலியஸ்டர் துணியால் தேசிய கொடி தயாரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பள்ளி மாணவர்களின் பேண்ட் வாத்ய நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நிருபர்களிடம் சுப்பாராவ் கூறியதாவது; இந்தியா முழுவதும் 78 ரயில் நிலையங்களில் தேசியகொடி ஏற்றுவதற்காக கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு கொடிக்கம்பம் அமைக்க ரூ.13 லட்சம் செலவாகிறது. தெற்கு ரயில்வேயில் 8 ரயில் நிலையங்களில் தேசிய கொடி ஏற்றுவதற்காக கம்பம் அமைக்கப்படுகிறது. சேலம் கோட்டத்தில் கோவை ரயில் நிலையத்தில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தேசிய கொடி பறக்கும் வகையில் கம்பத்தின் உச்சியில் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சுப்பாராவ் கூறினார். நிகழ்ச்சியில் ரயில்வே சீனியர் டிவிஷனல் கமர்சியல் மேலாளர் விஜூதீன், ரயில்வே பாதுகாப்பு படை கமாண்டன்ட் சீனிவாசராவ், நிலைய இயக்குனர் சதீஸ் சரவணன், நிலைய மேலாளர் செந்தில்குமார், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், எஸ்.ஐ.ஏசு, ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஆர்பிஎப் எஸ்.ஐ.க்கள் சிதம்பரம், ராஜா, அமிர்தராஜ், வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி