மஞ்சூர்: அவலாஞ்சி அணைகட்டு பகுதியில் குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கெத்தை பகுதியில் உணவு மற்றும் தண்ணீரை தேடி குட்டியுடன் 4 காட்டு யானைகள் உலா வந்தது. இவை மஞ்சூர் அடுத்துள்ள பூதியாடா கிராமத்திற்குள் புகுந்து அங்கிருந்த விளைநிலங்களை நாசம் செய்தது. இதைத்தொடர்ந்து வந்த குந்தா ரேஞ்சர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில், தற்போது அந்த யானைகள், கடந்த 3 நாட்களாக அவலாஞ்சி அணைகட்டு பகுதியில் முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களில் அணையில் இறங்கி ஆனந்த குளியல் போடும் காட்டு யானைகள், பின்னர் அருகில் உள்ள மின்வாரிய குடியிருப்புகளை ஒட்டியுள்ள தோட்டங்களில் புகுந்து வாழை மரங்களை சாய்த்து பெரும் அட்டகாசம் செய்து வருகிறது. குட்டியுடன் நடமாடும் காட்டு யானைகளால் அவலாஞ்சி மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக கடும் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் இடம் பெயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி