×

நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் கோலாகலம் : ஆயிரக்கணக்காேனார் பங்கேற்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் செவ்வாய் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும், மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய்கிழமை நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். நகரத்தார் சமூகத்தை சேர்ந்த ஆண்களுக்கு திருமணம் முடிந்தவுடன் அவர்கள், ‘ஒரு புள்ளியென’ கணக்கில் எடுத்து கொள்ளப்படுவார்கள். இவ்வாறு புள்ளிகள் எண்ணிக்கையில் அதிகமானோர் பொங்கலிடும் நிகழ்ச்சி, நாட்டரசன்கோட்டையில் மட்டுமே நடப்பதால், இவ்விழா அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்தாண்டு இவ்விழா நேற்று மாலை தொடங்கியது. முதல் பொங்கல் பானை வைக்க தேர்வு செய்யப்பட்ட குடும்பத்தினர் சிறப்பு செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் 5 மணிக்கு பொங்கல் வைக்க துவங்கியவுடன், தொடர்ந்து மற்றவர்களும் பொங்கலிட தொடங்கினர். முதல் பொங்கல் மண் பானையிலும், மற்றவர்கள் வெண்கல பானைகளிலும் வைத்தனர். நகரத்தார் சார்பில் 909 பேர் பொங்கலிட்டனர். இவர்கள் தவிர நேர்த்திக்கடன் வைத்துள்ள நூற்றுக்கணக்கானவர்களும், பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்தனர்.

இரவு அம்மன் சுற்றி வரும்போது ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். நகரத்தார் கூறியதாவது, ‘‘வேண்டுதல் அடிப்படையில் பல நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக இவ்விழா நடைபெற்று வருகிறது. தற்போது ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி விழா நடத்துவது என்பது குறைந்துவிட்டது. ஆனால் இவ்வூரில் செவ்வாய் பொங்கல் வைப்பவர்களின் எண்ணிக்கை குறையாமல் தற்போது வரை தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மற்ற விழாக்களுக்கு வரவில்லை என்றாலும், செவ்வாய் பொங்கலுக்கு வந்து விடுவது வழக்கம். இதில் மாப்பிள்ளை, பெண் பார்க்கும் நிகழ்ச்சியும் நடக்கும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mars Pongal ,Participants ,Nattarasankottai , Natarasankottai, Tuesday, Pongal
× RELATED வயது முதிர்ந்தவர்கள்,...