சென்னை: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்தில் 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், 4.5 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். ஜாக்டோ-ஜியோவின் முதல்நாள் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரையில் தொடக்கப்பள்ளிகள் அதிகளவு செயல்படவில்லை. பல மாவட்டங்களில் 1-ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் அதிகளவு பங்கேற்றதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டம் நீடிக்கிறது. தமிழகம் முழுவதும் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டத்திலும் தாலுகா அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட 300 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மன்னார்குடி, அவிநாசி, ராஜபாளையத்திலும் ஜாக்டோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்களிலும், வேன்களிலும் அழைத்து சென்றனர். பல இடங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் மறியலில் ஈடுபட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி