×

பஞ்சாப் முதல்வரின் சிறப்பான அறிவிப்பு!: அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் அமல்..!!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அரசு பேருந்துகளில்  பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் கடந்த மாதம் வெளியிட்டார். இந்த திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து இன்று முதல் பஞ்சாப் மாநிலத்திற்குள் பஞ்சாப் சாலை போக்குவரத்து கழகம், பஞ்சாப சாலை பஸ்கள், உள்ளாட்சி அமைப்புகள் இயக்கும் நகர பஸ் சேவை பேருந்துகள் உள்பட அரசுக்கு சொந்தமான பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமலுக்கு வருவதாக அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் பஞ்சாப் முழுவதும் உள்ள 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயன்பெறுவர் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்த, ஆதார், வாக்காளர் அட்டை உள்பட பஞ்சாப் மாநிலத்தவர் என்பதற்காக எந்தவொரு அடையாள சான்றுகள் அவசியம். அதேசமயம், அரசுக்கு சொந்தமான ஏ.சி. பஸ்கள், வால்வோ பஸ்கள் மற்றும் எச்.வி.ஏ.சி பேருந்துகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது. அதாவது இந்த பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் அமரீந்தர் சிங், ஏப்ரல் 1 முதல் மாநில போக்குவரத்து பேருந்துகளில் பஞ்சாபின் அனைத்து பெண்கள், சிறுமிகளும் இலவசமாக பயணிக்க எங்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப் பெண்களை மேலும் மேம்படுத்துவதற்கான வலுவான படியாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார். இந்த அறிவிப்பு அம்மாநிலத்தில் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. …

The post பஞ்சாப் முதல்வரின் சிறப்பான அறிவிப்பு!: அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் அமல்..!! appeared first on Dinakaran.

Tags : Punjab ,Chief Minister ,Chandigar ,
× RELATED பஞ்சாப் மாபியாக்களை ஒடுக்க...