காங்கயம்: காங்கயத்தில் முதன் முறையாக ரேக்ளா பந்தயம் நேற்று நடந்தது. இதில் 400 க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர். பாரம்பரியமான ரேக்ளா பந்தயங்கள் கொங்கு மண்டலத்தில் பொங்கல் திருநாளை ஒட்டி பல பகுதிகளில் நடத்தப்படுகிறது.
ரேக்ளா பந்தயங்களில் பெரும்பாலும் பயன்படுத்தும் காங்கயம் காளைகளின் தாய் வீடான காங்கயத்தில் முதன்முறையாக நேற்று இரு பிரிவுகளாக ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. முறையே 200 மற்றும் 300 மீட்டர் தூரங்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்று எல்லைக்கோட்டை தொட்டன.காங்கயத்தில் நடந்த இந்த ரேக்ளா போட்டியில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தாராபுரம், அரவக்குறிச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400 ஜோடி காளைகள் பங்குபெற்றன.
உடல் வலிமைக்கும் வண்டிபாரம் இழுப்பதற்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், பந்தய தூரத்தை மின்னலென கடந்து சென்றது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. காங்கயம் ரேக்ளா குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டிகளை காண திருப்பூர்,ஈரோடு,கரூர்,திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பொது மக்கள் குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்தனர். இது போன்ற போட்டிகளால் மேற்கு மண்டலத்தில் பாரம்பரிய கால்நடைகள் எண்ணிக்கை பெருகும் என காளை வளர்ப்போர் நம்பிக்கை தெரிவித்தனர்.
ரேக்ளா போட்டியில் 200 மீட்டர் தூத்திற்கு 260 ரேக்ளா வண்டிகளும், 300 மீட்டர் தூரத்திற்கு 140 வண்டிகளும் என 800 காளைகள் பங்கேற்றன.
200மீட்டர் பிரிவில் தாராபுரம் தனசேகர் வண்டி முதல் பரிசை தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சிரவைத்தம்பி, 3வது இடத்தை சின்னப்பம்பாளையத்தை சேர்ந்த செந்தில், 4வது இடத்தை இச்சிப்பட்டி லோகு பெற்றனர். 300 மீட்டர் பிரிவில் முதலிடத்தை காங்கயம் பெரியமுத்துசாமிகவுண்டர் வண்டியும், இரண்டாமிடத்தை கிணத்துக்கடவு நிதின் வண்டியம், 3வது இடத்தை கோவை வீரப்பனூர் அன்புகணேஷ் வண்டியும், 4வது இடத்தை முக்கூடல் ஜல்லிபட்டியைச் சேர்ந்த மிதுன் வண்டியும் பிடித்தன. வெற்றி பெற்ற வண்டிகளுக்கு பைக், ஸ்கூட்டர், மொபட், தங்கக்காசு உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி