டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 10 சதவீதம் இட ஒதுக்கீட்டு மசோதாவை வரும் கல்வியாண்டில் இருந்து அமல்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவு மக்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து, இதற்கான அரசியல் சாசன 124வது சட்டத் திருத்த மசோதாவை முதலில் மக்களவையில் தாக்கல் செய்து மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதா நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது. இது, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி, சட்டமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த சட்டத்தை எதிர்த்து ‘சமத்துவ இளைஞர்கள் சங்கம்’ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ’முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது. இது, இடஒதுக்கீடு சட்ட அடிப்படையை மாற்றும் விதமாக உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், புனேயில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் , 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை, வரும் கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நேற்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். இதனை அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் கேட்டு கொண்டு உள்ளோம் என்று கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி