×

உயிருக்கு போராடும் தந்தையிடம் ஆசி வாங்க மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்: ஸ்டான்லியில் நெகிழ்ச்சி சம்பவம்

பெரம்பூர்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் தந்தையிடம் ஆசி வாங்குவதற்காக, மருத்துவமனையிலேயே மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவொற்றியூர் மேற்கு மாடவீதியை சேர்ந்தவர் சுதேஷ் (60), வெல்டர். இவரது மனைவி மல்லிகா (54). இவர்களது மகன்கள் பிரகாஷ், சரவணன், சதீஷ். கடந்த சில மாதங்களுக்கு முன் சதீஷுக்கும், திருவொற்றியூர் சன்னதி தெருவை சேர்ந்த சித்ரா என்பவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது.

இவர்களின் திருமணம் பிப்ரவரி 15ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே சுதேஷ் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது வேகமாக வந்த மின்சார ரயில் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி முழுவதும் அகற்றப்பட்டுள்ளதால், நடக்க முடியாமல் உள்ளார். அதற்கான அறுவை சிகிச்சையும் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்த அறுவை சிகிச்சைக்கு முன்பு, தந்தை ஆசீர்வாதத்துடன் தனது திருமணத்தை நடத்த சுரேஷ் முடிவு செய்தார். இதுபற்றி பெண் வீட்டார் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு சதீஷ், சித்ரா ஆகியோர், தங்களது உறவினர்களுடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்குள்ள விநாயகர் கோயிலில் சதீஷ், சித்ராவுக்கு தாலி கட்டினார். பின்னர், சுரேஷ் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு சென்று, தந்தையிடம் ஆசி பெற்றனர். அப்போது சுதேஷ், ஆனந்த கண்ணீர் மல்க, மணமக்களை வாழ்த்தினார். அதை பார்த்ததும், அங்கிருந்த அனைவரும் கண் கலங்கினர். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hospital ,incident ,Stanley , son,married,hospital,blessing,life-threatening,father
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர்...