சென்னை: மைனர் பெண்ணை திருமணம் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை சூளைமேட்டை சேர்ந்த மாணவி இந்துமதி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வரும் போது, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மண்ணடியை சேர்ந்த முகமது ரியாஸ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரியவந்தது. அவர் மைனர் என்பதால் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி மாணவி திடீரென்று மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு முகமது ரியாஸ், மாணவியை கடத்தியது தெரியவந்தது. அதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் சூளைமேடு காவல் நிலையத்தில் முகமது ரியாஸ் மீது புகார் அளித்தனர். இதன்அடிப்படையில் காவல் துறையினர் மாணவியை தேடி வந்தனர். முகமது ரியாஸ் செல்போன் சிக்னலை வைத்து அவர் நாகையில் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் நாகைக்கு சென்று இருவரையும் சென்னை அழைத்து வந்தனர். மாணவி மைனர் என்பதால் முகமது ரியாசை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் ேநற்று முன்தினம் மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட பெண் முஸ்லிம் மதத்திற்கு மாறி தனது பெயரை ஆயிஷா என்று மாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. மேலும், மாணவி ஓரிரு நாட்களில் 18வது பிறந்த நாள் கொண்டாட உள்ளதாக தெரிவித்தனர். இதனால் மாணவியின் வயது குறித்து போலீசார் ஒரிஜினல் சான்று அளிக்க வேண்டும் என்று கூறி தனியார் நிறுவன ஊழியரை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் மறுத்துவிட்டார். அதைதொடர்ந்து போலீசார் நேற்று காலை மாணவிக்கு 17 வயது தான் என்பதற்கான சான்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பின்னர் இருதரப்பு வாதங்களை தொடர்ந்து மாஜிஸ்திரேட் முகமது ரியாசை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி