×

மேல்நிலை வகுப்புகளுக்கு வினாத்தாள் அமைப்பு மாற்றம் - கணித ஆசிரியர்கள் அதிர்ச்சி

மதுரை: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. மேலும் மொத்த மதிப்பெண்கள் 600 ஆக குறைக்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 பொதுத்தேர்வு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் முதல்முறையாக நடைபெறுகிறது. மேலும், செய்முறை தேர்வு இல்லாத பாடங்களுக்கு 90 மதிப்பெண்களுக்கும், செய்முறை தேர்வு உள்ள பாடங்களுக்கு 70 மதிப்பெண்களுக்கும் எழுத்துத்தேர்வு நடைபெறும்.செய்முறை தேர்வு இல்லாத பாடங்களுக்கு ஒரு மதிப்பெண்ணில் 20 கேள்விகளும், குறுவினாக்கள் பிரிவில் 2 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும், சிறு வினாக்களுக்கு 3 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும், பெருவினாக்கள் 5 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும் என மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். செய்முறை தேர்வு இல்லாத கணித பாடத்துக்கு ஒரு மதிப்பெண் வினாக்கள் 20 இடம் பெற்றுள்ள நிலையில், இந்த 20 வினாக்களும் கொள்குறி வகையில், அதாவது சரியான விடையை தேர்வு செய்து பதிலளிக்கும் வகையில் இடம் பெற்றிருந்தன.

இந்த வினாத்தாள் வடிவமைப்பு முறையில்தான் அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகளின் வினாக்கள் இடம்பெற்றன.
இந்நிலையில், அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், அனைத்து பாட வினாத்தாள்களின் வடிவமைப்பு முறையை வரையறுத்துள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள விதத்தில்தான் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், செய்முறை தேர்வு இல்லாத பாடங்களுக்கான முதல் 20 மதிப்பெண்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பில், கொள்குறி வகை வினாக்களுக்கு பதிலாக, சரியானவற்றை பொருத்துக, கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியான - தவறான இணைகளை கண்டறிக, கூறப்படும் கருத்துக்கான காரணத்தை எழுதுவது, சரியான - தவறான வாக்கியங்களை தேர்வு செய்வது என்பது போன்ற வடிவ வினாக்கள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திடீர் அறிவிப்பால், செய்முறை தேர்வு இல்லாத பாட ஆசிரியர்கள், குறிப்பாக கணிதப்பாட ஆசிரியர்கள், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் வெகுவாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என கணித ஆசிரியர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : General exam, math teachers, shock, questionnaire system
× RELATED வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு