×

23, 24ம் தேதி சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

சென்னை: சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகிற 23, 24ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24ம் தேதி தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவித்தார். இதை ஏற்று, இதுவரை சுமார் 50 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழகத்தில் முதலீடு செய்ய சில வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளது. இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்தபடி, வருகிற 23ம் தேதி காலை 10 மணிக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கி வைக்கிறார். தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை கொள்கை 2019ஐ மத்திய பாதுகாப்பு துைற அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

23ம் தேதி காலையில், ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கும் நடைபெறுகிறது. மதியம் 2 மணி அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கொரியா நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கும் நடக்கிறது.

இதைத்தொடந்து 2வது நாள் மாநாடு 24ம் தேதி காலை 10 மணிக்கு சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்குடன் தொடங்குகிறது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். 24ம் தேதி மாலை 3 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி கலந்து கொண்டு நிறைவு உரை ஆற்றுகிறார். இந்த விழாவில் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பின்னர் தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் கலை நிகழ்ச்சியுடன் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு பெறுகிறது.

இன்று அமைச்சரவை கூட்டம்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி கேட்டுள்ள நிறுவனங்கள் குறித்து இறுதி முடிவு செய்யப்பட உள்ளது. அவர்களுக்கு அளிக்கப்பட உள்ள சலுகைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் இறுதி செய்யப்பட வேண்டும். இதுபற்றி விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nandambakkam Business Center ,World Investors Conference ,Chennai , Nandambakkam, Business Center, World Investors Conference
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...