×

கொடநாடு கொலையில் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு சயான், மனோஜ் ஜாமீனில் விடுவிப்பு: அதிகாலை 2 மணிக்கு மாஜிஸ்திரேட் அதிரடி

சென்னை: எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டிய வழக்கில், ஆதாரம் இல்லாமல் மீண்டும் மீண்டும் ஆஜர்படுத்தியதால், கொடநாடு கொலை குற்றவாளிகள் இருவரையும் ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட் அதிரடி உத்தரவு  பிறப்பித்தார். ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதி சென்ற ஒரு கும்பல், காவலாளியை கொலை செய்துவிட்டு, அங்கிருந்த ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இந்த விவகாரத்தில்  கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கொடநாடு பங்களாவில் ஜெயல லிதாவின் கார் டிரைவர் கனகராஜ், பணத்தை  கொள்ளையடிக்கவில்லை. அதற்கு பதில் முக்கிய ஆவணங்களை ஒரு பையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்று விட்டதாக கூறியிருந்தனர்.

முக்கிய குற்றவாளியாக கூறப்பட்ட கனகராஜை போலீசார் தேடி வந்த நிலையில், சேலம் அருகே வாகனம் மோதி மர்மமான முறையில் அவர் உயிரிழந்தார். தொடர்ந்து கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் சயானின்  மனைவி, மகள் ஆகியோரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர். சயான் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். கொடநாடு விவகாரத்தில் அடுத்தடுத்து 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இது மரணம் இல்லை.  கொலைதான் என்று, கூலிப்படை தலைவன் சயான், தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர்.அதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், டெல்லி சென்ற மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை  கூலிப்படை தலைவர் சயான், மனோஜ் ஆகியோரை துவாரகா பகுதியில்  உள்ள தனியார் தங்கும் விடுதியில் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், அவர்களை இரவோடு இரவாக சென்னைக்கு கொண்டு வந்தனர்.

 பின்னர் இருவரையும் எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ‘‘எங்களுக்கு முதல்வர் எடப்பாடியை தெரியாது. ஆனால்,  எடப்பாடியுடன் இருக்கும் படத்தை கனகராஜ் காட்டியதாகவும், அவருடன் நெருங்கிய சொந்தக்காரர் என்று கூறியதால்தான் இந்த சம்பவத்தில்ஈடுபட்டோம். நாங்கள் கொலை செய்ய வேண்டும் என்று இதில் ஈடுபடவில்லை. ஆனால் கட்டிப்போட்டதில் அவர் இறந்து விட்டார். நாங்கள் பணத்தை எடுக்கவில்லை. கனகராஜ் ஆவணங்களை எடுத்தார். அது குறித்து  கேட்டபோது அதைப் பற்றி தெரியாது. ஆளும்கட்சி பிரமுகர் எடுத்து வரச் சொன்னதால் எடுத்துச் செல்வதாக கூறினார். ஆனால் கனகராஜ் மற்றும் நான் குறி வைக்கப்பட்டதால் பயந்து விட்டேன். அவரும் இறந்து விட்டார்.  என்னுடைய மனைவி, மகள் இறந்து விட்டனர். கனகராஜ் சொன்னபடி ₹5 கோடியை என்னிடம் வழங்கவில்லை என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.ஆனால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், உங்களை இயக்குவது யார்? மேலும், யார் சொல்லி இந்த பேட்டியை கொடுத்தீர்கள். உங்களை தூண்டியது யார் என்று தொடர்ந்து தங்கள் பாணியில்  விசாரித்து வந்தனர். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.  10 மணி நேரம் நடந்த விசாரணையின் முடிவில் இருவரையும் விடுமுறை கால எழும்பூர் குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சரிதா முன்னிலையில் மாலை 5 மணிக்கு ஆஜர்படுத்தினர். அப்போது, அவர் போலீசாரிடம், வழக்கு பதிவு செய்துள்ள 153(ஏ), 505(1)(ஏ)(பி), 505(2) ஆகிய பிரிவுகளின்படி, அவர்களது பேட்டியால் எங்கு  கலவரம் ஏற்பட்டது. அரசுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது என்று கூறியுள்ளீர்கள். அதனால், முதல்வரிடம் விளக்கம் பெற்றீர்களா, அவர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா என்று பல்வேறு கேள்விகளை  அடுக்கடுக்காக கேட்டார்.

 அதற்கு போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசாரின் விளக்கத்தை மாஜிஸ்திரேட் சரிதா ஏற்கவில்லை. இருந்தும் போலீஸ் தரப்பில் தொடர்ந்து அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வாதம் இரவு  9.50 மணி வரை அதாவது 4.50 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. ஆனால் மாஜிஸ்திரேட் கேட்ட விளக்கத்தை போலீசாரால் தீர்த்து வைக்க முடியவில்லை. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சார்பாக ஆஜராக  வக்கீல்களும் இல்லை. இதனால், இருவரையும் காவல் நீடிப்பு செய்ய முடியாது என்று மாஜிஸ்திரேட் மறுத்து விட்டார். இதனால் இரவு 9.50 மணிக்கு, இருவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து, எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு தனி அறையில் வைத்து  விசாரணை நடத்தினர். பின்னர், மீண்டும் 11.30 மணியளவில் சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட் சரிதா வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போதும், போலீசார் அதே அறிக்கையை தாக்கல் செய்தனர். இதை பார்த்த மாஜிஸ்திரேட்  சரமாரியாக கேள்வி எழுப்பினார். ஆனால், போலீஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், சயான் மற்றும் மனோஜை ஆகிய இருவரையும் மாஜிஸ்திரேட் விடுவித்தார். வருகிற 18ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் வக்கீல்களுடன் ஆஜராக வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் ரூ.10 ஆயிரத்துக்கு சொந்த  ஜாமீனில் விடுவிக்கிறேன் என்று கூறினார். இதையடுத்து, அவர்கள் அதிகாலை 3 மணியளவில் நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்தனர். அவர்கள் பஸ்சில் செல்வதற்கு கூட பணம் இல்லாமல் இருந்தனர். பின்னர் பத்திரிகையாளர்களின் காரில் ஏறி, ரயில்நிலையம்  சென்றனர். அங்கிருந்து கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

நாளை மீண்டும் ஆஜர்
சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட் சரிதா வீட்டில் ஆஜரான பின் சயான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உள்ளே போனோம், நீதிபதியை பார்த்தோம். வழக்கை விசாரித்து விடுவித்துவிட்டனர். மீண்டும் 18ம் தேதி காலை 10  மணிக்கு வர சொல்லி உள்ளனர். அப்போது, ₹10,000 ஆயிரமும், 2 பேர் சாட்சிக்கும் அழைத்து வர சொல்லி இருக்கிறார்கள். அதில், ஒரு நபர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கணும் என்று மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.  இவ்வாறு அவர் கூறினார்.

முடிந்தால் எடப்பாடி நிரூபிக்கட்டும்
சயான், மனோஜை சிறையில் அடைக்க மறுத்து மாஜிஸ்திரேட் விடுதலை செய்யப்பட்டது குறித்து மேத்யூ கூறுகையில், ‘‘என்ன எப்ப வேண்டுமானாலும் வந்து கைது செய்யட்டும். சயான், மனோஜை சட்டத்துக்கு புறம்பாக  கைது செய்துள்ளார்கள். ஏற்கனவே உள்ள வழக்குகளில் தவறாமல் நீலகிரி கோர்ட்டில் ஆஜராகி வருகின்றனர். அவர்கள் மீது எந்த தப்பும் இல்லை. கைது செய்ததில் எந்த முகாந்திரமும் இல்லாததால் கோர்ட்டில் விடுதலையாகி  உள்ளனர். முடிந்தால் எடப்பாடி கொலை குற்றவாளி இல்லையென்று நிரூபிக்கட்டும் என்று தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manoj , murder,Kodadadu, Ettapadi ,Palanisamy, Manoj
× RELATED பிரதமர் மோடி வருகையை ஒட்டி பாதுகாப்பு...