புதுடெல்லி: எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட நிரந்தரமாக குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்யும்படி டிடிவி.தினகரன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உட்பட எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த விசாரணையின் போது டிடிவி.தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அதிமுகவிற்கு சொந்தமான இரட்டை இலை சின்னத்தை நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை. மேலும் சம்பந்தமே இல்லாத ஒரு சின்னத்தை எங்கள் தரப்பு தேர்தலில் போட்டியிட கேட்டாலும் இபிஎஸ், ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்’’ என வாதிட்டார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு வாதத்தில்,” தமிழகத்தில் தற்போது உடனடியாக எந்த ஒரு தேர்தலும் நடைபெற வாய்ப்பில்லை. அதனால், குக்கர் சின்னத்தை டிடிவி.தினகரனுக்கு ஒதுக்கீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிடக் கூடாது’’ என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கை ஜனவரி 17ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கடந்த 7ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்படுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்ற இன்றைய விசாரணையில் தெரியவரும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி