மேட்டுப்பாளையம் : இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் இந்திய ரஷ்ய கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பில் இந்திய ரஷ்ய கலாச்சார கலைவிழாவின் 18ம் ஆண்டு விழா நடந்து வருகிறது. இதையொட்டி ரஷ்ய நாட்டு நடனக் குழுவான ஆர்கிட் குழுவின் இயக்குனர் எலினா தலைமையில் 14 நடனக்கலைஞர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இக்குழுவினர் சென்னை, கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் கலைநிகழ்ச்சி நடத்திய பிறகு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வந்தனர். இங்கு வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே நடந்து வரும் யானைகள் நலவாழ்வு முகாமை கண்டு களித்தனர். முகாமில் யானைகளை அருகில் சென்று பார்த்து பரவசமடைந்து மகிழ்ந்தனர். யானைகளுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து இந்திய ரஷ்ய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் பொதுச்செயலாளர் தங்கப்பன் கூறுகையில், இந்தியா ரஷ்யா நாடுகளின் நட்புறவைப் பேணும் வகையில் ரஷ்ய நாட்டு கலைக்குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ரஷ்ய நாட்டின் பாரம்பரிய நடனமான பாலே நடனம் கலாச்சார நடனம் உட்பட 24 வகையான நடனங்களை நிகழ்த்தி வருகின்றனர். ரஷ்யாவில் யானைகள் இல்லை. இதனால் யானைகளை பார்க்க அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் யானைகள் முகாமை இவர்கள் ஐந்தாவது முறையாக பார்வையிட்டுள்ளனர், என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி