×

கத்திமுனையில் கடைக்காரரை மிரட்டிய 4 வாலிபர்கள் கைது

சென்னை: தாம்பரம் அருகே படப்பை பிடிஓ அலுவலக சாலை விவேக் தெருவை சேர்ந்தவர் உமாராம். இவரது மகன் பகத்ராம் (45). படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரியில் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு பகத்ராம் கடையில் இருந்தபோது சுமார் 9 மணியளவில் 2 வாலிபர்கள் அங்கு சென்றனர். பகத்ராமிடம் கத்தியைகாட்டி ₹1000 கேட்டு மிரட்டினர். அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டு தப்பி சென்றனர். வாலிபர்கள் கடைக்காரரிடம் மிரட்டியது, கடையை சூறையாடிய காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில்
பதிவானது.

இதுகுறித்து மணிமங்கலம் போலீசில் பகத்ராம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தனர். அதில், ஆத்தனஞ்சேரி காந்தி தெருவை சேர்ந்த தீனா (20), அண்ணா தெருவை சேர்ந்த தினேஷ் (20) என தெரிந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். போலீஸ் விசாரணையில் ஆத்தனஞ்சேரி காந்தி தெருவை சேர்ந்த தீனா (18), அண்ணா தெருவை சேர்ந்த தினேஷ் (18) மற்றும் அவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (18), சரவணன் (18) ஆகியோர் என்பது தெரிந்தது. எனவே 4 பேரையும் போலீசார் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : youths ,shop owner , Four youths,arrested,threatening,shop owner
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...