×

கால்வாய் அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: தொற்று நோய் பாதிப்பில் தவிக்கும் மக்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஆவடி: திருமுல்லைவாயல் பகுதியில் கால்வாய் அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம்போல் தேங்குவதால் சுகாதார சீர்கேட்டில் மக்கள் தவித்து வருகின்றனர். ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் சோழம்பேடு பிரதான சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் அரசு, தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், மின் வாரிய அலுவலகம், திருமண மண்டபங்கள், அம்மா உணவகம், எரிவாயு தகனமேடை மற்றும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன.

இதனால், போக்குவரத்து மிகுந்து காணப்படும். அண்ணனூர் ரயில் நிலையத்திற்கு பெரும்பாலானோர் இந்த வழியாகவே சென்று வருகின்றனர். இச்சாலையின் இருபுறமும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. சமீபகாலமாக வீடுகள், தனியார் மருத்துவமனை, வர்த்தக நிறுவனங்களின் கழிவுநீர் இந்த கால்வாயில் விடப்படுவதால், கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது.  

கடந்த சில மாதங்களாக இந்த கால்வாயில் திருமுல்லைவாயல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கால்வாயிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. அங்குள்ள சிறுவர் பூங்கா வரை அருகே தேங்குகிறது. இதனால், பாதசாரிகள், பூங்காவுக்கு வரும் சிறுவர்கள் கழிவுநீரை மிதித்தபடிதான் சென்று வர வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும், மாதக்கணக்கில் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதுகுறித்து பலமுறை ஆவடி நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர், என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கால்வாய் அடைப்பை நீக்கி, சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,canal , Wastewater,road,canal,Officers,infected,infectious diseases
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி