புதுடெல்லி: லண்டனைச் சேர்ந்த காமன்வெல்த் தீர்ப்பாயத்தின் நடுவர் பதவியை ஏற்க, மத்திய அரசுக்கு வழங்கிய சம்மதத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி திடீரென திரும்ப பெற்றார். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவர் ஏ.கே.சிக்ரி. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இவரும் இடம் பெற்றுள்ளார். சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை அப்பதவியில் இருந்து மாற்றுவதற்காக சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலை தேர்வுக்குழுவில் இவரும் இடம் பெற்றார். அதில், வர்மாவை இடமாற்றம் செய்ய சம்மதம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். லண்டனில் உள்ள காமன்வெல்த் தீர்ப்பாயம் உள்ளது. இதில், காமன்வெல்த் அமைப்பில் உள்ள நாடுகளின் நீதிபதிகள் நடுவர்களாக செயல்படுவார்கள். அதில், இந்தியாவின் சார்பாக நீதிபதி ஏ.கே.சிக்ரியை நியமிக்க மத்திய அரசு விருப்பம் தெரிவித்தது. இதற்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி முதலில் சம்மதம் தெரிவித்தார். இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதைத் தொடர்ந்து, இந்த பதவியை ஏற்பதற்காக மத்திய அரசுக்கு வழங்கிய சம்மதத்தை நேற்று மாலை நீதிபதி சிக்ரி திரும்ப பெற்றார். இது குறித்து அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், ‘‘காமன்வெல்த் தீர்ப்பாய நடுவர் பதவியில் நியமனம் செய்ய நீதிபதி ஏ.கே.சிக்ரியை மத்திய அரசு கடந்த மாதம் அணுகியது. இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். ஆண்டுக்கு இரண்டு அல்லது 3 விசாரணைக்கு இதில் கலந்து கொள்ள வேண்டும். இதற்கு எந்தவித சம்பளமும் இல்லை’’ என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி