பெங்களூரு: ‘‘மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற உடனேயே, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அறிவிப்பை ராகுல் வெளியிடுவார்’’ என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக மாநில கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:மக்களவை தேர்தலில் மஜத.வுடன் கூட்டணி அமைப்பது உறுதி. அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதே நேரம் அக்கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக பல்வேறு இன்னல்களை நாடு சந்தித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் சலுகை அறிவித்திருப்பது தேர்தல் ஸ்டண்ட். ரபேல் போர் விமானம் கொள்முதலில் நடந்த முறைகேடுகளை மறைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் பின்னணியில் மிகப்பெரிய மர்மம் இருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் பதவிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை போல் ராகுல் வாக்குறுதியை மறப்பவர் கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் அறிவிப்பை ராகுல் வெளியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி