சென்னை: பொங்கல் கூட்டத்தை பயன்படுத்தி போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஆம்னி பஸ் நிர்வாகங்களிடம் இருந்து, ₹18 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை ெகாண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ரயில் முன்பதிவு பல நாட்களுக்கு முன்பே தீர்ந்து விட்டது. இதனால் மக்கள் ஆம்னி பஸ்களை நாடி செல்கின்றனர். இதை பயன்படுத்தி சில ஆம்னி பஸ் நிர்வாகத்தினர் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். அதேபோல் ஒருசிலர் முறையாக சாலை வரி செலுத்தாத பஸ்களை கொண்டுவந்து, பயணிகளை ஏற்றினர்.
இதுகுறித்த புகார் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு சென்றது. இதையடுத்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ‘டீம்-50’ அமைக்கப்பட்டது. இந்த அதிகாரிகள் குழு தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களை வழிமறித்து சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது பயணிகளிடத்தில் வசூலிக்கப்படும் கட்டணம், சம்மந்தப்பட்ட பஸ்சுக்கு முறையாக சாலை வரி செலுத்தப்பட்டிருக்கிறதா, டிரைவர், கண்டக்டரிடம் முறையான ஆவணங்கள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 861 ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் பல்வேறு முறைகளில் விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக, அந்த பஸ் நிர்வாகங்களிடம் இருந்து ₹18 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதிக கட்டணம் வசூல் செய்த 11 பஸ்களை அதிகாரிகள் சிறை பிடித்துள்ளனர். இதேபோல் நேற்றும் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இன்றும் ஏராளமான பயணிகள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், ஆம்னி பஸ் நிர்வாகத்தினர் கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறார்களா என அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.
இலவச தொலைபேசி சேவை
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து பாக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு பயணிகள் எளிதாக புகார் அளிக்கும் வகையில் இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 18004256151 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்யலாம்.
மாநகர பஸ், ரயில்கள் கூட்டம் இல்லை
சென்னையில் படிப்பு, பணி நிமித்தமாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல துவங்கி விட்டனர். இதனால் சென்னை மாநகரில் இயக்கப்படும் பஸ்களிலும், ரயில்களிலும் கூட்டம் குறைவாக இருந்தது. பெரும்பாலான பஸ்களில், ஏராளமான சீட்கள் காலியாக இருந்தன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி