ஹாசன்: ‘‘உயர் சாதியினரின் வாக்குகளை பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளார்’’ என முன்னாள் பிரதமர் தேவகவுடா குற்றம்சாட்டினார். கர்நாடகா மாநிலம், ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி: பாஜ.வின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளதை, சமீபத்தில் முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டின. இதனால்தான், உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அஸ்திரத்தை பிரதமர் மோடி பயன்படுத்தியுள்ளார். இதே காரணத்துக்காகவே, இந்த இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் மஜத.வுக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கப்படுகிறது என்பதை பொறுத்தே கூட்டணி பற்றி முடிவு செய்வோம். கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை மாற்றம் செய்திருப்பது பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. இதில் துறை ரீதியான நடவடிக்கை என்பது மேலோட்டமானது. உள்ளுக்குள் சுதந்திரமாக செயல்பட வேண்டிய சிபிஐ அமைப்பை சிலர் தவறாக பயன்படுத்த முயற்சிப்பதையே இது காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி