சென்னை : ஆறுமுகசாமி ஆணையத்தில் 23-ம் தேதி ஆஜராக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் 21-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரும், மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை 22ம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் ஏற்கெனவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது சகோதரர் ஜெ.தீபக் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. மேலும், ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்போலோ மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 130-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் வரும் 23-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21-ம் தேதியும், தம்பிதுரை எம்.பி. ஜனவரி 22-ம் தேதியும் ஆஜராக வேண்டும் எனவும் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி