×

ஹார்திக் பாண்டியா, ராகுல் பேசியது அவர்களின் தனிப்பட்ட கருத்து: இந்திய அணி கேப்டன் விராட் கோலி

சிட்னி: ஹார்திக் பாண்டியா, ராகுல் பேசியது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொலைக்காட்சி பேட்டியின்போது பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ஹர்த்திக் பாண்டியா தனது கருத்திற்காக மன்னிப்பு கேட்டார். எனினும் இருவர் மீதும் கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு அதிருப்தியில் உள்ளது. குறைந்தபட்சம் 2 போட்டியில் விளையாட அவர்களுக்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நாளை சிட்னியில் தொடங்கவுள்ளன. இந்த போட்டிக்கு முன்னதாக கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, உலக கோப்பைக்கு தயார் ஆவதே தங்களின் உடனடி கவனம் என்றும், ஒரு குழுவாக தலைமை தாங்கி அணியை வழிநடத்த வேண்டும் என்பதை புரிந்துகொண்டிருப்பதாகவும் விராட் கோலி கூறியுள்ளார். மேலும், பெண்கள் குறித்து லோகேஷ் ராகுல், ஹார்திக் பாண்டியா ஆகியோர் கூறியது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும். இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்திய கிரிக்கெட் அணியின் பார்வையில், இந்த அவசியமற்ற கருத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதுகுறித்து இருவரிடம் பேசப்பட்டு விட்டது. கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தில் முடிவெடுத்த பிறகு, யாரை அணியில் சேர்ப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும் என கோலி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஹர்த்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hardy Pandya ,Virat Kohli ,Rahul ,Indian , Haridk Pandya, KL Rahul, Indian team, Virat Kohli, Australia, ODI Match
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...