×

தினமும் ரவுண்டு கட்டி டன் கணக்கில் கொட்டப்படும் அவலம் குப்பை கழிவுகளால் மாசடையும் குடிநீர் ஏரி

* பராமரிப்பதில் தொடரும் அலட்சியம் „* பருவ மழை ஏமாற்றியதால் மக்கள் ‘திக்திக்’

சென்னை: பருவ மழை பொய்த்த நிலையில், சென்னை குடிநீர் ஏரிகளை பராமரிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும், புழல் ஏரியை சுற்றிலும் தினமும் டன் கணக்கில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் நீர்  மாசடைந்து வருவதாகவும் ெபாதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. 20.86 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை  பொதுப்பணி துறை பராமரித்து வருகிறது. புழல் ஏரிக்கரை செங்குன்றம், புழல், சூரப்பட்டு, சண்முகபுரம், முருகாம்பேடு, கள்ளிக்குப்பம், பானுநகர், வெங்கடேஸ்வரா நகர் விரிவு, திருமுல்லைவாயல், ஆரிக்கம்பேடு, பொத்தூர் வரை நீண்டுள்ளது. புழல் ஏரி தண்ணீர் புழல்  மற்றும் கீழ்ப்பாக்கம்சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து  லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.இப்படி சப்ளை செய்யப்படும் குடிநீரை பொதுமக்கள் சுட வைத்து குடிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் அப்படிப்பட்ட குடிநீர் உற்பத்தியாகி வரும் புழல் ஏரியில் என்ன நடக்கிறது என்பதை பார்த்தால் நிச்சயம்  சூடு செய்து குடிக்கவும் மனம் இடம் கொடுக்காது. அந்த அளவுக்கு ஏரி மாசடைந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: புழல் ஏரி செங்குன்றம், அம்பத்தூர், புழல் ஆகிய பகுதிகளில்  கழிப்பிடமாக மாறி உள்ளது. மேலும் ஏரியில் தண்ணீர் இருக்கும்போது கள்ளிக்குப்பம், முருகாம்பேடு, சூரப்பட்டு, ஆரிக்கம்பேடு, லெட்சுமிபுரம் ஆகிய இடங்களில் உள்ள  ஏரியில் நான்கு, இரண்டு சக்கர வாகனங்களை கழுவுவது, மாடுகளை குளிப்பாட்டுவது, துணி துவைப்பது மற்றும் குளிப்பது போன்ற செயல்கள் நடக்கின்றன. அம்பத்தூர் பகுதி ஒரகடம்,  வெங்கடேஸ்வரா நகர், பானு நகர், பழனிப்பா நகர், கிழக்கு பானு நகர், மேற்கு பானு நகர்  மற்றும்  திருமுல்லைவாயல் பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் மூலம் ஏரியில்  விடப்படுகிறது. புழல் ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் ஏரியில் கலக்கின்றன. இப்படிப்பட்ட செயல்களால் ஏரி மாசடைந்து வருகிறது. மேற்கண்ட தவறு ஒருபுறம் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் சமீப காலமாக கட்டிட இடிபாடுகள், இறைச்சி கழிவுகள், வீட்டு குப்பை, வெட்டிய தென்னை மரங்கள், இளநீர் ஓடுகள், கரும்பு கழிவுகள் உள்ளிட்டவை புழல்  ஏரியில் கொட்டப்பட்டு வருகின்றன. இவைகளை இரவில் மட்டுமல்லாமல், பகலிலும் கூட லாரிகள் மூலம் கொண்டு வந்து ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள புழல்  ஏரியின் ஒரு பகுதியில் மர்ம நபர்கள்  கொட்டி வருகின்றனர்.

இவ்வாறு ஏரியில்  கழிவுகளை தினமும் டன் கணக்கில் கொட்டி வருவதால் ஏரி தண்ணீர் மாசடைவதுடன் விஷத்தன்மையாக மாறும் அபாயம் உள்ளது. இந்த தண்ணீரை குடிக்கும் சென்னை மக்களுக்கு  பல்வேறு விதமான  நோய் தாக்கும் அபாய நிலை உள்ளது. மேலும், பருவ மழை பொய்த்ததால் கோடைக்கு முன்பே குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் அபாயம் உள்ளதால் மக்கள் பெரிதும் திண்டாட்டத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, சமூக விரோதிகள் ஏரியில் தொடர்ந்து கழிவுகளை கொட்டி வருவதை  தடுக்க அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Everyday, Round tunnel, Drinking,litter waste
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...