திருப்பூர்: திருப்பூர் ஆண்டிபாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், 30 நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டது. திருப்பூர்- மங்கலம் ரோடு ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு பொருட்கள் கார்டுதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் இப்பகுதி பொதுமக்கள், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க சென்றனர். ஆனால் சிலருக்கு இந்த தொகுப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள், அப்பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த திருப்பூர் மத்திய பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பொங்கல் பரிசு தொகுப்பு தகுதியுடைய அனைத்து கார்டுதாரர்களுக்கும் நிச்சயமாக வழங்கப்படும் என்று போலீசார் முன்னிலையில் ரேஷன் கடை ஊழியர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை விலக்கிக்கொண்டனர். இதனால், திருப்பூர்- மங்கலம் ரோட்டில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி