சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மீண்டும் திறக்க கோரி 1.68 லட்சம் மனுக்களுடன் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் நேற்று காலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்தினர்.சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக கூறி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் திறக்க எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி, ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர்கள் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே கவன ஈர்ப்பு போராட்டத்தை நேற்று காலை நடத்தினர். இதில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி 1.68 லட்சம் கோரிக்கை மனுக்களுடன் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்களுக்கும், ஆலையில் பணியாற்றும் எங்களுக்கு இது வரை கேன்சர் உள்ளிட்ட எந்த நோயும் வரவில்லை. எனவே தமிழக முதல்வர் ஸ்டெர்லைட் ஆலையை நம்பி உள்ள 1.68 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தின் போது கோரிக்கை விடுத்தனர்.இந்த போராட்டத்தின் முடிவில் ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்கள் 1.68 லட்சம் மனுக்களை தலைமை செயலகத்தில் முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி