புதுடெல்லி: உலகின் மிக உயரமான கட்டிடமாக கருதப்படும், ‘புர்ஜ் கலிபா’வில் ராகுல் காந்தியின் புகைப்படம் இடம் பெற்றுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகின் மிக உயரமான கட்டிடமாக கருதப்படுவது ‘புர்ஜ் கலிபா’. இது, 163 மாடிகளை கொண்டது. 830 மீட்டர் உயரம் கொண்டது. இந்த கட்டிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படம் வைக்கப்பட்டு இருப்பது போன்ற வீடியோ ஒன்று பேஸ்புக் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், துபாய்க்கு வரும் ராகுலை வரவேற்கும் விதமாக புர்ஜ் கலிபாவில் அவருடைய புகைப்படம் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது ஆனால், இது போலி வீடியோ என விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராகுல் காந்தி நாளை முதல் 2 நாள் பயணமாக துபாய் செல்வது உண்மைதான்.
ஆனால், புர்ஜ் கலிபா கட்டிடத்தில் ராகுலின் படம் இடம் பெற்றிருப்பது பொய். இந்த வீடியோவில் ‘பியூகோ’ என்ற குறியீடு இடம் பெற்றுள்ளது. ‘பியூகோ’ என்பது, ‘வீடியோ மேக்கிங் அப்ளிகேஷன்’ என்பதாகும், இதை மொபைலில் பதிவிறக்கம் செய்தால், அதில் பல்வேறு படங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த காட்சிகளின் பின்னணியில் புதிய புகைப்படத்தை வைத்து, எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே, புர்ஜ் கலிபா கட்டிடத்தில் ராகுலின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது போல் செய்யப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டு இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி