டெல்லி: பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொது பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பொதுப் பிரிவில் உள்ளோரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா, மக்களவையில் நேற்று நிறைவேறியது. நான்கு மணி நேரத்துக்கு மேலாக நடந்த விவாதத்துக்கு பின், மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது பின், மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
மக்களவை கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்று ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. இன்று மாநிலங்களவையில் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கேலாட் தாக்கல் செய்தார். இதனிடையே மாநிலங்களவையில் தாக்கல் இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்காக அதன் அலுவல்கள் மேலும் 1 நாள் நீட்டிக்கப்பட்டது. ஆனால் விதிமுறைகளை பின்பற்றாமல் தங்களோடு கலந்து ஆலோசிக்காமல் மாநிலங்களைவையை நீட்டிக்கும் முடிவை அரசு எடுத்துள்ளதாக கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மசோதாவின் மீதான விவாதத்தின் போது அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்,10% இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் முயற்சியை தங்கள் கட்சி எதிர்ப்பதாக தெரிவித்தார். இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையிலானதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் ஏற்கனவே 69% இட ஒதுக்கீடு இருக்கும் நிலையில் புதிய நடைமுறையால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் விளக்கினார்.இதையடுத்து பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொது பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி