கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே கூக்கால் பகுதியில் புலியின் கால் தடம் காணப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கொடைக்கானல் மேல்மலை கிராம் கூக்கால். இவ்வூரை ஒட்டியே வனப்பகுதி உள்ளது. கிராமத்திற்கும், வனப்பகுதிக்கும் இடையில் ஏரி ஒன்று உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் புலி ஒன்று பலியாகி கிடந்தது. இதனால் புலியின் நடமாட்டம் இருப்பதையறிந்து இப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். தொடர்ந்து வனத்துறையினர், புலிகள் காப்பகத்தினர் இப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கூக்கால் ஏரி பகுதியில் புலியின் கால் தடம் போல் காணப்பட்டுள்ளது. இதை கண்ட பொதுமக்கள் புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து மாலை, இரவு நேரங்களில் வெளியில் வரவே அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இது புலியின் கால் தடமா என்பதை இதுவரை உறுதி செய்யவில்லை. தொடர்ந்து கண்காணிப்பு பணியை செய்து வருகிறோம்’’ என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி