நாகர்கோவில்: மெக்கா புனித பயணத்தில் சேவை குறைபாடு காரணமாக டிராவல் ஏஜென்சிக்கு ₹14 ஆயிரம் அபராதம் விதித்து நாகர்கோவில் நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பு அளித்தது. நாகர்கோவில், இடலாக்குடியை சேர்ந்த முகம்மது யூசுப், கடந்த 2017ல் குடும்பத்தினருடன் மெக்கா மற்றும் மதீனா நகருக்கு புனித பயணம் மேற்கொண்டார். மெக்காவில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. திரும்பி வர 7 பேருக்கும் பயண சீட்டு உறுதி செய்யப்படாமல், விமான நிலையம் வந்து திரும்பியது, பின்னர் தங்கியிருக்க விடுதி கிடைக்காதது, லக்கேஜுக்கு விமான நிலையத்தில் அதிக கட்டணம் செலுத்தியது, இருந்தும் 16 கிலோ பொருட்களை வெளியே போட்டதால் வேதனை என முகம்மது யூசுப் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுடன் நாகர்கோவில் வந்து சேர்ந்தனர்.
இதையடுத்து தக்கலை டிராவல் ஏஜென்சி மீது நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் முகமது யூசுப் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணசாமி, உறுப்பினர் சங்கர் ஆகியோர், பாதிக்கப்பட்ட முகம்மது யூசுப்புக்கு நஷ்ட ஈடாக ₹10 ஆயிரம், வழக்கு செலவாக ₹4 ஆயிரம் என ₹14 ஆயிரத்தை டிராவல் ஏஜென்சி உரிமையாளர் ஒரு மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி