சென்னை: தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை நான் வரவேற்கிறேன். திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரணப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. எனவே, அப்பணிகள் முடிவடைந்ததும் அங்கு தேர்தலை நடத்த வேண்டும் என தமிழக பாஜ சார்பில் நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.இதேபோல் தமிழகத்தின் பல்வேறு கட்சியினரும் திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தலைமை தேர்தல் அதிகாரி, திருவாரூர் தேர்தல் ரத்து குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கை அடிப்படையில், திருவாரூர் இடைத்தேர்தலை ஆணையம் ஒத்திவைத்துள்ளது. ஆனால், இதன் பின்னணியில் பாஜ கட்சி உள்ளது என தமிழக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், அனைத்து கட்சிகளின் கோரிக்கை அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த ஒத்திவைப்புக்கு பின்னால் பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது..
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி